சட்டசபை இடைத்தேர்தலில் ராஜசேகர ரெட்டி மனைவி போட்டியின்றி தேர்வுஅனைத்து கட்சிகள் முடிவு
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி 2 மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரது தொகுதியான புலிவெந்த லாவில் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ராஜசேகரரெட்டி மனைவி விஜயலட்சுமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து தெலுங்கு தேசம், பிரஜாராஜ் ஜியம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லோக் சத்தா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. விஜயலட்சுமியை போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் புலிவெந்தலா இடைத்தேர்தலில் மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று மதியம் வரை விஜயலட்சுமியை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.
இது பற்றி ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களிடம் கூறும் போது, “எனது தாயாரை போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து கட்சி தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.