குண்டாக இருப்பதால் பதவி பறிப்பு: விமான பணிப்பெண்கள் கோர்ட்டில் வழக்கு
விமானத்தில் பணிப்பெண்களாக இருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பிட்ட எடைக்கு மேல் இருக்கக்கூடாது என்பதும் ஒன்று.
தேசிய விமான நிறுவனத்தில் பணியாற்றிய 10 பணிப்பெண்கள் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தனர். அவர்களை விமான நிறுவனம் பணி நீக்கம் செய்தது.
இதை எதிர்த்து பணிப்பெண்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் சார்பில் பணிப்பெண் சல்லீரா சார்ப் வழக்கு மனுவை தாக்கல் செய்து இருந்தார். அதில், எங்களிடம் உரிய விளக்கங் கள் கேட்காமலேயே பணி நீக்கம் செய்து விட்டனர். இது சட்ட விரோதமானது. அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடியது என்று கூறி இருந்தார்.
நீதிபதி அகர்பால் முன்பு விசாரணைக்கு வந்தது. பணிப்பெண்கள் சார்பில் வக்கீல் அரவிந்த்குமார் சர்மா ஆஜர் ஆனார்.
இது தொடர்பாக விமான நிறுவனம் 22-ந்தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
விமான நிறுவன விதிகள்படி விமான பணிப்பெண்களாக 18 வயதில் சேரலாம். அப்போது அவர்கள் 152 சென்டி மீட்டர் உயரம் இருக்க வேண்டும். 26 வயதில் இருந்து 30 வயது வரை உள்ளவர்கள் 50 கிலோ வரை இருக்கலாம். அதற்கு மேல் வரை உள்ளவர்கள் 56 கிலோ வரை இருக்கலாம். இதற்கு மேலும் அதிகரித்தால் வேலையில் தொடர முடியாது