சொத்து விவரம் கொடுத்தே தீர வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு
புதுடில்லி: "சுப்ரீம் கோர்ட் அலுவலகமும் பொதுமக்களுடன் நேரடித் தொடர்புடைய பொதுத் துறையாக இருப்பதால், அங்கு பணியாற்றும் தலைமை நீதிபதியும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், சொத்துக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும். நீதி வழங்கும் சுதந்திரம் என்பது, நீதிபதிகளுக்கான உரிமையல்ல... கடமை' என, டில்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது."தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் சொத்து விவரம் சமர்ப்பிக்க வேண்டும்' என, கடந்த செப்டம்பரில், டில்லி ஐகோர்ட்டின் ஒரு நீதிபதி அடங்கிய பெஞ்ச், உத்தரவு பிறப்பித்தது.இதற்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனும், மற்ற நீதிபதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்."தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குறித்த விவரங்களை வெளிப்படுத்த முடியாது' என்று அவர்கள் வாதிட்டனர். "இச்சட்டத்தின் கீழ் நீதிபதிகள் குறித்த விவரங்களை வெளியிடுவது, அவர்களைத் தொந்தரவு செய்வதற்குச் சமம்' என்று, தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் கூறினார். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தலைமை நீதிபதி குறித்த தகவல்கள் பெற அனுமதிக் கூடாது என்றும், அப்படிச் செய்வது, நீதியளிக்கும் சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட் சார்பில், டில்லி கோர்ட்டில் மனுவும் போடப்பட்டது.
இது குறித்த விசாரணை, , டில்லி ஐகோர்ட்டில் நடந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதிகள் விக்ரம்ஜீத் சென் மற்றும் முரளீதர் ஆகியோர் வெளியிட்ட, 88 பக்க தீர்ப்பில், ""நீதிச் சுதந்திரம் என்பது, தலைமை நீதிபதியின் உரிமையல்ல; அது, அவரது கடமை. பொதுமக்களுடன் நேரடித் தொடர்புடைய சுப்ரீம் கோர்ட்டும், பொதுத் துறையாக இருப்பதால், அதன் தலைமை நீதிபதியும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சொத்துக் கணக்கைக் கொடுக்க வேண்டும்,'' என்று தீர்ப்பளித்துள்ளனர்.